முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து விட்டு தயிரும், ஒன்றரை தேக்கரண்டி உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனி தனியே கரகரப்பாக அரைத்துவைத்து கொள்ளவும்.
பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், மல்லி மற்றும் புதினா தழைகளை ஒன்றாக ஒன்றிரண்டாக மிக்ஸியில் சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிது மல்லிதழையை கடைசியில் போட எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக அரிசியை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
ஒரு குக்கரைஅடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், தாளிக்க கொடுத்திருக்கும் அனைத்து வாசனை பொருட்களையும் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வாசம் வர வதக்கி விட்டு, தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
இரண்டு நிமிடம் வதங்கியதும், மிளகாய்த்தூள், மிளகு, மல்லி சிறிது, பட்டை, ஏலக்காய் , கிராம்பு , அன்னாசிப்பூ, சாஜிரா, கறுப்பு ஏலக்காய் இவைகளை வறுத்த அரைத்த பொடிகளில் 1 தேக்கரண்டியும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு பச்சை மிளகாய், மல்லி கலவையை சேர்த்து நன்கு பிரட்டவும்.
அதன் பின் பிரட்டி வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பின்பு மூடி விசில் போட்டு ஒரு விசில் வந்ததும், மிதமான தீயில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.
மட்டன் ஊருக்கு தகுந்தாற் போன்று மாறுபடும். எனவே வேகும் நேரத்தை அதற்கேற்றார் போல் வைத்துக் கொள்ளவும். அதேபோல் நான் தயிர் மற்றும் மட்டன் தண்ணீர் விடும் என்பதால் அப்படியே தான் தண்ணீர் சேர்க்காமல் வேக வைத்து எடுத்தேன். அதுவுமே வெந்து குக்கரை திறக்கும் போது 1/2 டம்ளர் அளவு தண்ணீர் விட்டிருந்தது.
இப்போது மற்றுமொரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் அளந்து ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 3/4 ஸ்பூன் உப்பும் சேர்த்து, அடுப்பில் வைக்கவும். சீரக சம்பா அரிசிக்கு ஒரு டம்ளர்க்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றலாம். மசாலாவில் இருக்கும் தண்ணீர் அளவை பொறுத்து குறைத்து கொண்டு ஊற்ற வேண்டும். நான் பாஸ்மதி அரிசி உபயோகித்திருப்பதால் ஒன்றுக்கு ஒன்றரை டம்ளர் என்ற கணக்கில் ஊற்றியுள்ளேன்.
தண்ணீர் கொதி வந்ததும், அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
தண்ணீர் மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று சுண்டும் நிலையில் வந்ததும் கறி மசாலாவை அதில் ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விடவும்.உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
அதுவும் சுண்டிய நிலைக்கு வரும் போது, அடுப்பில் பழைய தோசை தவாவை வைத்து , அது சூடுவந்ததும் அதன் மேல் மல்லி தழை பொடியாக நறுக்கியதை சிறிது தூவி, அந்த பிரியாணி மாசாலா 1/2 ஸ்பூனையும் தூவி விட்டு, நெய்யை சுற்றிலும், கொஞ்சம் நடுவிலும் என ஊற்றி விட்டு மூடி மேலே ஒரு வெய்ட் வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் அப்படியே விடவும்.
பிறகு திறந்து லேசாக கிளறிவிட்டு இன்னும் ஒரு 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ரெடி ஆனதும் இறக்கி விடலாம். சுவையான சூப்பரான கம கம திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணி தயார்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க