கொசுவினால் பரவும் நோயான டெங்கு ஏடிஸ் எனப்படும் கொசுவினால் ஏற்படுகிறது. அதிகமாக பரவக் கூடிய இந்த நோய் உலக அளவில் 100 நாடுகளில் காணப்படுகிறது. இதை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும். முறிவு நோய் என்றும் அழைக்கப்படும் டெங்கு கொசு கடியினால் ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகள் 5லிருந்து 7 நாட்களுக்கு பிறகுதான் தெரிகிறது. அதன் பின் ஒவ்வொரு நாளும் தீவிரமடைய தொடங்குவதால், இந்நோய்க்கான காரணங்களையும், அறிகுறிகளையும் தெரிந்துக் கொள்வது மிக அவசியம். அதன் மூலம் சரியான முறையில் இந்நோயை தடுக்கவோ அல்ல சரியான சிகிச்சையோ அளிக்கலாம்.
காரணங்கள்-
டெங்கு ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸ், இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் மூலமாக நேரிடையாக பரவாது. ஏடிஸ் எஜிப்டி கொசு இந்த வைரஸ் தாக்கிய நபரை கடித்து பின் மற்றவர்களை கடிக்கும் பொழுது, இந்நோயை பரப்பும் வேலையை செய்கிறது. இந்நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், கொசுக்களை முதலில் விரட்ட வேண்டும்.
அறிகுறிகள்-
டெங்குவினால் பாதிக்கப்பட்டவருக்கு, அதற்கான அறிகுறிகள் 5 லிருந்து 7 நாட்களுக்கு பிறகுதான் தெரிய தொடங்கும். முதற்கட்டத்தில் அந்த நபருக்கு தலைவலி, 104 டிகிரி வரை காய்ச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, மூட்டுவலி, கண்வலி, குளிர், தசைவலி, நிணநீர் முனைகளில் வீக்கம், தோலில் தடிப்பு போன்றவை ஏற்பட்டு விலகும்.
இரண்டாவது கட்டத்தில் உடலின் வெப்பநிலை வெகுவாக குறைவதை காண முடியும். மூன்றாவது கட்டத்தில் உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு உடல் வெப்பம் திடீரென அதிகரிக்கும். பெரும்பாலும் இந்நோய் ஏற்பட்டவர்களால் மருத்துவர் இந்நோயை கண்டுப்பிடித்து சொல்லும் வரை , இதன் அறிகுறிகளை உணரவே முடிவதில்லை. இன்னும் நிலைமை மோசமடையும் பொழுது உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் (இரத்த ப்ளேட்லட்ஸ்) எண்ணிக்கை, இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, தீவிர வயிற்று வலி ஏற்பட்டு, உடலுக்குள் இரத்த கசிவும் உண்டாகி ஆபத்தான நிலை ஏற்படுகிறது.
டெங்கு வராமல் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்-
டெங்கு கொசுக்கள் விடியற்காலை, பின்-மதிய நேரங்களில் மிக சுறுசுறுப்பாக இருக்கின்றன என்பதை தெரிந்துக்கொண்டு அந்நேரங்களில் வீட்டினுள் இருப்பது நலம். கொசுக்களில் இருந்து உங்களை காத்துக் கொள்ள கீழ் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்:
- கொசு விரட்டும் களிம்புகளை உங்கள் உடல் மற்றும் ஆடை முழுவதும் தடவி கொள்ளுங்கள்.
- கொசுவைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்தை உபயோகிக்கவும்.
- உங்கள் நகரங்களில் கிடைக்கும் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவும்.
- நீங்கள் வசிக்கும் இடங்களில் எங்கும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவும்.
- குப்பைகளை அவ்வப்பொழுது அகற்றி, அவை சேர்ந்து குவியாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
- அடர்ந்த நிற உடைகள் கொசுக்களை அதிகம் ஈர்க்கும் என்பதால், மென்மையான நிற உடைகளை அணியவும்.
- உங்கள் சுற்றுபுறத்தில் கொசு இனப்பெருக்கம் செய்ய வசதியாக உள்ள டயர், பூ ஜாடிகள், குப்பைத்தொட்டிகள் போன்றவற்றை அகற்றி விடவும். நீர் தேக்கத் தொட்டிகளை சுத்தமாக வைத்து இருக்கவும்.
Image source: Wikipedia Commons, Flickr

